Published : 15 Dec 2017 09:07 AM
Last Updated : 15 Dec 2017 09:07 AM
ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சையாக தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். கடந்த முறை பணப் பட்டுவாடா விவகாரத்தால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த முறை வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப் பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வருமான வரித்துறையினர்
இந்தத் தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். சில தினங்களுக்கு முன் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியில் கண்டெய்னர் லாரியில் 500-க்கும் மேற்பட்ட குக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின. இந்நிலையில் ராயபுரத்தில் உள்ள குக்கர் கடை மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த கடைக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, கடையில் எவ்வளவு குக்கர்கள், மிக்சிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை பொருட்கள் விற்பனையானது. டோக்கன் முறையில் வாக்காளர்களுக்கு பொருட்கள் விற்கப்பட்டதா, அதற்கான ஆவணங்கள் உள்ளதா? என சோதனை நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT