

சென்னை: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஆய்வின்போது தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருந்துகளின் தரத்தை உறுதி செய்யஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மருத்துவ உபகரணங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடு இல்லை.
மத்திய சுகாதாரத்துறை தகவல்களின்படி, நாட்டிலுள்ள மருத்துவஉபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப் படுத்தப்படாமல் இருப்பதால், அதனை தரக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மருத்துவ உபகரணங்களுக்கு பதிவு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. மருந்து உபகரண உற்பத்தியாளர்கள், தங்களது நிறுவனம் சார்பில் அதனை தரப் பரிசோதனைக்குட்படுத்த தமிழகத்தில் 5 ஆய்வகங்கள் உட்பட நாடு முழுவதும் 39ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.