Published : 25 Sep 2023 06:15 AM
Last Updated : 25 Sep 2023 06:15 AM

புரட்டாசி மாதம் தொடக்கம்: காசிமேட்டில் மீன்களின் விலை குறைந்தது

சென்னை: புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து, மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாதம் கடந்த 18-ம்தேதி தொடங்கியது. பெருமாளுக்கு இந்த மாதம் உகந்த மாதம் என்பதால், பலர் புரட்டாசிமாதம் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்பது கிடையாது. இதனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது.

காசிமேட்டில் கடலுக்குச் சென்ற200-க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கரை திரும்பின. அதிகளவு மீன்களை மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்தனர். ஆனால், விற்பனை குறைவாகவே இருந்தது. இதனால், மீன்களின் விலை குறைந்தது.

கடந்த வாரம் கிலோ ரூ.400-க்குவிற்பனை செய்யப்பட்ட சங்கரா மீன் நேற்று ரூ.200-க்கும், ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட வவ்வால் நேற்று ரூ.250-க்கும், ரூ.500-க்கு கடந்த வாரம் விற்பனையான வஞ்சிரம் மீன் நேற்று கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது.

இதேபோல், கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனையான பெரிய இறால் நேற்று ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்பனையான சிறிய இறால் நேற்று ரூ.100-க்கும் விற்பனையானது.

மேலும், கிழங்கா, தேங்காய்பாறை உள்ளிட்ட பல்வேறு மீன்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்து விற்பனையானது. இதனால், மக்கள் பலர் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x