மதுவில் சானிடைசர் கலந்து குடித்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த மேலும் ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் அதிக போதைக்காக மதுபானத்தில் சானிடைசரை கலந்து குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

கும்பகோணம் பெருமாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மா.பாலகுரு(48), கருணை கொல்லை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் த.சவுந்தரராஜன்(43). தொழிலாளர்களான இவர்கள் உட்பட 4 பேர் செப்.21-ல் காவிரி ஆற்றின் சக்கரப்படித்துறை பகுதியில் மது அருந்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பாலகுரு, சவுந்தரராஜன் ஆகியோர் அங்கு உயிரிழந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், இருவரின் சடலங்களையும் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் அதிக போதைக்காக மதுபானத்தில் சானிடைசரை கலந்து குடித்தது தெரியவந்தது.

இவர்களுடன் மது அருந்திய துக்காம்பாளையத் தெருவைச் சேர்ந்த ஜெய்கிருஷ்ணா என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, செப்.21-ல் காந்தி பூங்கா அருகில் உயிரிழந்து கிடந்ததாக அடையாளம் தெரியாத ஒருவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதில், அவர் பெயர் முருகன் என்பதும், பாலகுரு, சவுந்தரராஜன், ஜெய்கிருஷ்ணா ஆகியோருடன், சானிடைசர் கலந்த மது அருந்தியவர் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in