Published : 29 Dec 2017 09:52 AM
Last Updated : 29 Dec 2017 09:52 AM

கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னையில் தொழிலாளர் நல அலுவலகங்கள் திறப்பு

கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னையில் புதிய தொழிலாளர் நல அலுவலகங்களை தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியிலும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை தலைமையிடமாகக் கொண்டும் புதிய தொழிலாளர் நல அலுவலகங்கள் மற்றும் சென்னையில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய பன்மொழி உதவி மையத்தின் தொடக்க விழா, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல்.ரோட்டில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தொழிலாளர் நல இணை ஆணையர் யாஸ்மீன் பேகம் வரவேற்றார், தொழிலாளர், வேலை வாய்ப்புத் துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா தலைமை வகித்தார். தொழிலாளர் ஆணையர் கா.பாலச்சந்திரன், கூடுதல் தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால், வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், ரூ.73 லட்சம் செலவில் திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புதியதாக அமைக்கப்பட்ட புதிய தொழிலாளர் நல அலுவலகங்களையும், ரூ.10 லட்சம் செலவில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர் வசதிக்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் பன்மொழி உதவி மையத்தை காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x