Published : 22 Sep 2023 06:18 AM
Last Updated : 22 Sep 2023 06:18 AM

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி - துரித உணவகத்துக்கு ‘சீல்’ உரிமையாளர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடைக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல்லில் உள்ள ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 18-ம் தேதி இரவு கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் உள்ள சக்தி துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்று சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திக் கடந்த 19-ம் தேதி கடையின் உரிமையாளர் சென்னப்பன் (42) என்பவரை கைது செய்தனர்.

உணவகத்தில் ஆய்வு: மேலும், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் துரித உணவகத்தில் ஆய்வு செய்து, உணவுப் பொருட்களின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காகச் சேலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சித் தலைவர் பரிதா நவாப் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உணவகத்தில் ஆய்வு செய்து, உணவகத்துக்கு ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x