2ஜி வழக்கை ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள்; தீர்ப்பையும் பெரிதாக வெளியிட வேண்டும்: ஸ்டாலின்

2ஜி வழக்கை ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள்; தீர்ப்பையும் பெரிதாக வெளியிட வேண்டும்: ஸ்டாலின்
Updated on
1 min read

2ஜி வழக்கை ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்கள்; தீர்ப்பையும் பெரிதாக வெளியிட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"2ஜி வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தவறான புள்ளிவிவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2ஜி வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி.

திமுக எந்தத் தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு போடப்பட்டபோது, திமுகவிற்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. ஊடகங்களும் இதை பெரிதாக வெளியிட்டன. தற்போது திமுக எந்த தவறும் செய்யவில்லை என்ற தீர்ப்பு வந்துள்ளது. இதையும் ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ எனக்கூறினார்.

2ஜி வழக்கு குறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:

"அரசியல் காழ்புணர்ச்சியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. திமுக பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. நீண்டகாலமாக நடந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது" எனக்கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in