Published : 29 Dec 2017 10:10 AM
Last Updated : 29 Dec 2017 10:10 AM

மிடாஸ் ஆலையில் சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து ஆவணங்கள் ஆய்வு

மிடாஸ் மதுபான ஆலையில் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட அறையைத் திறந்து ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சசிகலா, இளவரசி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் கடந்த நவம்பரில் 5 நாட்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி இரவு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.

இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா, மகன் விவேக் ஆகியோரை குறிவைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கிருஷ்ணப்பிரியாவின் கணவர் கார்த்திகேயன், ஷகிலாவின் கணவர் ராஜராஜன் ஆகியோரும் சசிகலா தொடர்புடைய பல நிறுவனங்களில் நிர்வாகிகளாக உள்ளனர்.

இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசியின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மீண்டும் சோதனை நடத்தினர். ஏற்கெனவே நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சென்னை, கோவையில் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அடையாறில் உள்ள கார்த்திகேயன் வீடு, மிடாஸ் மதுபான ஆலை, இந்த ஆலைக்கு அட்டைப் பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதன் வீடு, மணிமங்கலத்தில் உள்ள மின்சார சாதனங்கள் சேமித்து வைக்கும் ஸ்ரீசாய் குடோன் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. நேற்று 2-வது நாளாக மிடாஸில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே நடந்த சோதனையின்போது மிடாஸ் ஆலையில் கைப்பற்றிய ஆவணங்களை அங்குள்ள அறையில் பூட்டி சீல் வைத்திருந்தனர். அந்த அறையை நேற்று திறந்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீசாய் குடோன்களிலும் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x