Published : 11 Dec 2017 10:01 AM
Last Updated : 11 Dec 2017 10:01 AM
குக்கர் சின்னம் வெற்றி பெறுவது உறுதி என்பதால், ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தலை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் தினகரன், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். தியாகப்பா தெரு, கண்ணன் தெரு, ஏகாம்பரம் தெரு, மண்ணப்ப தெரு, தங்கவேல்பிள்ளை தெரு, ஜவான்மல் சவுக்கார் தெரு, ரங்கநாதபுரம், ஏகப்பன் தெரு, முனியப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, ‘‘ஏழரை கோடி தமிழக மக்களையும் வெறுப்படைய வைக்கின்ற ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், இந்த ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் என்னிடம் வைத்து வருகின்றனர். மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற இந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார். பிரச்சாரத்தின்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயரிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:
எங்கள் ஆதரவாளர்களையும், எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க திரண்டு வரும் பொதுமக்களையும் ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் வெற்றி பெறும் என்பது உறுதியானதால்தான் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எங்களுக்கு எதிராக பேசிவருகிறார். மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் தன்னை அதிகார மையமாக நினைத்துக்கொண்டு தேர்தல் நிறுத்தப்படும் என்று அவர் பேசி வருகிறார். தேர்தலை நிறுத்தவும் திட்டமிடுகிறார். மக்கள் அதை பார்த்துக்கொண்டுதான் இருக் கின்றனர்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT