

சென்னை: மல்டிபிள் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்த முதலீட்டாளர்கள் எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மல்டிபிள் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு அந்த நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் என்.கிருஷ்ணன் மற்றும் எஸ்.செந்தில் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மோசடி செய்த தொகையை இந்த நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டனர்.
இன்னும் பணத்தைப் பெற்றுக்கொள்ளாத முதலீட்டாளர்கள் நீதிமன்றத்தில் உரிய அடையாள ஆவணங்களுடன் ஆஜராகி பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.