Last Updated : 27 Dec, 2017 08:38 AM

 

Published : 27 Dec 2017 08:38 AM
Last Updated : 27 Dec 2017 08:38 AM

விவசாயிகளின் கடன் தேவைகளுக்காக ரூபே கிசான் கிரெடிட் கார்டுகளை முழுமையாக வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

தமிழகத்தில் 2.96 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத அளவுக்கு இந்தக் கடன் அட்டைகளை வழங்கு மாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கிசான் கிரெடிட் கார்டு எனப்படும் விவசாயிகளுக்கான கடன் அட்டை என்ற திட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 1998-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கடனை பயிர் பெருக்கத்துக்கும்,சுயதேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவசாய நிலங்கள் மற்றும் பட்டா வைத்திருக்கும் விவசாயிகள் இந்தக் கடன் அட்டை பெற தகுதியானவர்கள். நிலத்தின் அளவைப் பொறுத்தும் பயிர் செய்வதற்குத் தேவையான செலவினங்களைக் கருத்தில் கொண்டும் கடன் வழங்கப்படும். இதற்கு குறைந்தபட்ச, அதிகபட்ச அளவு கிடையாது.

விவசாய கடன் அட்டை 3 வருடத்துக்குத் தகுதியானவை. அதேசமயம், வருடத்துக்கு ஒரு முறை திறனாய்வு செய்யப்படும். இந்த அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற, நகர்ப்புற வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறலாம். இந்தக் கடன் அட்டை விவசாயிகளின் சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் இந்த அட்டையைப் பயன்படுத்தி தங்களது சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும்.

இந்த அட்டையின் மூலம், ரூ.3 லட்சத்துக்குள் கடன் பெறும் விவசாயிக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகளுக்கு அவர்கள் கடனை சரியாக திரும்பச் செலுத்துவதைப் பொறுத்து மத்திய அரசு 3 சதவீத வட்டி மானியம் வழங்குகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 2.96 லட்சம் விவசாயிகளுக்கு இந்த விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்குவதற்காக கிசான் கிரெடிட் கார்டு எனப்படும் விவசாயிகளுக்கான கடன் அட்டை என்ற திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்தக் கடன் அட்டையின் மூலம், வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவதோடு விவசாயிகளுக்கு விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2.96 லட்சம் விவசாயிகளுக்கு இந்தக் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ரூ.25.43 லட்சம் கடனை விவசாயிகள் பெற்றுள்ளனர். மேலும், ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பதற்கான வசதியுடன் 66,596 ரூபே கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது, வழங்கப்பட்ட மொத்த கடன் அட்டையில் 22.45 சதவீதம் ஆகும். எனவே, ரூபே கிசான் கிரெடிட் கார்டுகளை 100 சதவீதம் விவசாயிகளுக்கு வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கடன் அட்டையின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வங்கிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x