Published : 14 Dec 2017 09:13 AM
Last Updated : 14 Dec 2017 09:13 AM

திமுக வேட்பாளர் மருது கணேஷ் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம்: கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் மருது கணேஷ், கொளுத்தும் வெயிலில் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருது கணேஷ், பகுதி வாரியாக திட்டமிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். கொருக்குப்பேட்டையில் உள்ள ஜீவா நகர், பாரதி நகர், மீனாம்பாள் நகர், சுதந்திரபுரம், மோட்சபுரம் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார்.

வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுடன் கைகுலுக்கியும் பெரியவர்கள் காலில் விழுந்தும் வாக்கு கேட்டார். கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சியினர் தங்கள் கட்சிக் கொடிகளுடன் வந்து மருது கணேஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்படும். பின்னர், மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க நிரந்தர ஏற்பாடு செய்வேன். முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் தங்கு தடையின்றி கிடைக்க ஆவன செய்வேன்’’ என்று மருது கணேஷ் உறுதி அளித்தார்.

ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் தனி வாகனத்தில் சென்று திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x