Published : 24 Dec 2017 10:08 AM
Last Updated : 24 Dec 2017 10:08 AM

கட்டணமில்லாமல் இசை நிகழ்ச்சி மூலம் 16 ஆண்டுகளாக காந்திய சிந்தனையை பரப்பும் தமிழிசை பாடகர்

காந்திய சிந்தனையை இசை நிகழ்ச்சி மூலம் கட்டணமில்லாமல் 16 ஆண்டுகளாக பரப்பி வருகிறார் காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த காந்தியவாதி யான தமிழிசை பாடகர்.

இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பான பாராளுமன்றத்துக்குள், கடந்த 2001-ம் ஆண்டு டிச. 13-ம் தேதி அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர். இந்தத் தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காந்தியின் மீது மிகுந்த பற்றுதலோடு அவரது சிந்தனைப்படி வாழ்ந்துவரும் மறைமலைநகரை அடுத்த காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த சம்பந்தன் என்பவருக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்திய கொள்கைகளைப் பின்பற்றும் அகிம்சை நாட்டில், குண்டு சத்தங்கள் கேட்பதை அவர் விரும்பவில்லை. இதனால் அன்றைய தினம் முதல், ஒவ்வொரு பவுர்ணமிக்கும் உலக அமைதி வேண்டி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அதன்படி, டெல்லி தமிழ்ச்சங்கம், மதுரை மீனாட்சி கோயில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அண்மையில் 195-வது இசை நிகழ்ச்சியை நடத்தியுள் ளார்.

கடந்த 1946-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி காந்தியடிகள் ஆலய தரிசனம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் பயணம் மேற்கொண்டபோது, காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றுள்ளது. அப்போது மக்களை சந்தித்தார் காந்தி. அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரும் வகையில் ரயில் நிலையத்தில் காந்தி சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார் சம்பந்தன். இந்த ரயில் நிலையத்தில் நிரந்தரமாக காந்தி சிலையை வைக்க கிராம மக்கள் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறை நன்முறை அல்ல

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சம்பந்தன் கூறியதாவது : ஆயுத பலத்தை ஆத்மா பலத்தால் வென்றவர் காந்தி. அவர் பிறந்த நாட்டில் வன்முறை நன்முறை அல்ல, நம் முறையும் அல்ல. உலகில் சாந்தி நிலவ வேண்டுமானால் காந்தியத்தைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. அகிம்சையை விதைத்த காந்தி பிறந்த நாட்டில் பாராளுமன்ற தாக்குதல் என் மனதை மிகவும் பாதித்தது. நான் தமிழ் இசைப் பாடகர்.

இதுவரை 1000 மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மாதம் ஒருமுறை காந்திய சிந்தனையை விளக்கி இசை நிகழ்ச்சியை கட்டணமின்றி 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். என்னுடன் பங்கேற்கும் சக கலைஞர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x