சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரைப்பை குடல் ரத்தப்போக்கு சிகிச்சை மையம்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரைப்பை குடல் ரத்தப்போக்கு சிகிச்சை மையம்

Published on

சென்னை: அப்போலோ மருத்துவமனையின் மூத்த இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.ஆர்.பழனிச்சாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தனது 40-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இரைப்பை குடல் ரத்த போக்கு நோய்களுக்கான நவீன சிகிச்சை மையத்தை வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இரைப்பை குடல்ரத்த போக்கு இறப்பு விகிதம் 10 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பை குறைக்கும் வகையில், இந்த சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது.

பல்வேறு வகையான இரைப்பை குடல் கோளாறுகளையும், நோய்களையும் எங்களதுதிறமைவாய்ந்த மருத்துவ நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சை அளிக்க, இம்மையம் தொடங்கப்படவுள்ளது. இந்த மையத்தில் உணவுக்குழாய், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை போன்றவை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதன் மூலம் நோயில் இருந்து முழுவதுமாக குணமடையலாம்.

முன்னதாக, வரும் 17-ம் தேதி இரைப்பை குடல் ரத்தப்போக்கு சிகிச்சை தொடர்பான கருத்தரங்கம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ரெசிடென்சி டவர் ஓட்டலில் நடைபெறுகிறது. இந்தகருத்தரங்கம் இங்கிலாந்து மருத்துவர்களால் நடத்தப்படுகிறது. தொடர்ந்து வரும் 19 மற்றும் 20-ம்தேதிகளில் சென்னை அடுத்துள்ள வானகரம் அப்போலோ மருத்துவமனையில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆர்.கே.வெங்கடாசலம் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in