

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி பகுதி சபா கூட்டத்திற்கு பாம்புகளுடன் வந்த கவுன்சிலர், பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 42-வது வார்டு குமரன் நகரில் நேற்று பகுதிசபா கூட்டம் நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பழகன் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:
இந்த வார்டுக்கு உட்பட்ட வஉசி நகர், குமரன் நகர், ஜனகபுரி லே-அவுட், பசுமை நகர், கிருஷ்ணப்பா காலனி, செயின்ட் மேரிஸ் நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் எந்த அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தரவில்லை. குறிப்பாக சீரற்ற குடிநீர் விநியோகம், குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் மின்விளக்கு, சாலைமேம்பாட்டு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இக்கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்கள் முன்வர வேண்டும். மேலும், இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இன்று (நேற்று) காலையில் கூட 2 பாம்புகளை பிடித்தோம், என்றனர். பிடிக்கப்பட்ட 2 பாம்புகளை மாநகராட்சி அலுவலர்களிடம் காட்டி, ஒப்படைத்தனர்.