

சென்னை: சென்னையில் உலகத் தரத்தில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு முட்டுக்காடு அருகில் 34 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீட்டு விழாவில்பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘‘ சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ‘கலைஞர் Convention Centre’ சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய - உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், மிக பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியில் இடம் தேடும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இ்ந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில், சென்னைகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு கிராமத்துக்குட்பட்ட 34 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடம் உறுதி செய்யப்பட்டதும், சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறும். விரைவில் இதற்கான தேசிய அளவிலான ஒப்பந்தம் கோரப்படும் என்றும் ஓராண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுதிறக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.