Published : 14 Sep 2023 06:00 AM
Last Updated : 14 Sep 2023 06:00 AM

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களில் ஒடிசா மற்றும் அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் செப். 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப். 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சவெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

செப். 13-ம் தேதி (இன்று) காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வானூரில் 9 செ.மீ., முகையூரில் 7 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் வெங்கூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, கஞ்சனூர்,நெமூர், சூரப்பட்டு, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதிகள்,தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x