Published : 13 Sep 2023 04:08 PM
Last Updated : 13 Sep 2023 04:08 PM

என்எல்சி நில விவகாரத்தில் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டோர் அணுகினால் பரிசீலனை: உயர் நீதிமன்றம்

சென்னை: என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் அணுகினால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நெய்வேலி என்எல்சி மூன்றாம் சுரங்க விரிவாக்கத் திட்டத்துக்காக கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி ஆகிய கிராமங்களில் 25 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 25 ஆயிரம் குடும்பங்களிடமிருந்து 37 ஆயிரத்து 256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

கையகப்படுத்தும் நிலம் விவசாய நிலம் என்பதை கருத்தில்கொண்டு, ஏக்கருக்கு 30 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு குறைந்தபட்ச இழப்பீட்டை கொடுத்துவிட்டு, நிலத்தின் சந்தை மதிப்புக்கு இணையாக என்எல்சி பங்குகளை வழங்க வேண்டும். கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு அருகிலேயே தங்கள் கிராமங்களை மறு உருவாக்கம் செய்துதர வேண்டும்.

வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து முன்னுரிமை வழங்க வேண்டும். நிலத்தின் பயன்பாடு முடிந்தபிறகு அந்தந்த உரிமையாளர்களிடம் திருப்பித்தர வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி நிர்வாகம், தமிழக அரசு ஆகியோருக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "18 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு சட்டப்படி, இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, மறுவாழ்வு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது" என்று வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், "இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தை அணுகவில்லை" என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதா? இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் மனுவில் இடம்பெறவில்லை என்பதால் இந்த மனுவை ஏற்க முடியாது எனவும், மனுதாரர் பாதிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x