

ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக் காற்று வீசி வருவதால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மணல் பரவி கிடக்கிறது. இதனால் அரிச்சல் முனைக்கு வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
கடந்த ஒரு வாரமாக தனுஷ் கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை கடலோரப் பகுதி களில் பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஆங்காங்கே மணலால் மூடப்பட்டுள்ளது. அது போல அரிச்சல் முனை பகுதியில் மணல் நிரம்பிக் காணப்படுகிறது.
இதனால் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணி கள் சிரமப்படுகின்றனர். தனுஷ்கோடியில் கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என்றும், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கவும் போலீஸார் தடை விதித்துள்ளனர்.
மேலும் மாலை 5 மணிக்கு பிறகு தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. மேலும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.