Published : 29 Dec 2017 09:59 AM
Last Updated : 29 Dec 2017 09:59 AM
தினகரன் ஆதரவாளர்கள் 44 பேர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். ஆளும்கட்சியான அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து கடந்த 25-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தினகரன் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்களிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதன்படி, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்டோரின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவர் வந்த சிறிது நேரத்தில் புதிய அறிவிப்பு வெளியானது.
அதில், முன்னாள் எம்எல்ஏ மேலூர் ஆர்.சாமி உட்பட மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொறுப்புகளில் இருந்த 35 பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் விழுப்புரம் தெற்கு - ஞானமூர்த்தி, தருமபுரி - சி.தென்னரசு, நீலகிரி - எஸ்.கலைச்செல்வன், திருச்சி மாநகர் - ஜே.சீனிவாசன், திருச்சி புறநகர் - சமயபுரம் சி.ராமு, பெரம்பலூர் - எஸ்.கார்த்திகேயன், தஞ்சை தெற்கு - மா.சேகர், மதுரை புறநகர் - கா.டேவிட் அண்ணாதுரை, தேனி - ஸ்டார் எம்.ரபீக் ஆகிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர்கள் 9 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
விடுவிப்பு
அதேபோல, புதுக்கோட்டை மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆம்பூர் எம்எல்ஏவாக இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆர்.பாலசுப்பிரமணி, வேலூர் மேற்கு ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம் தொடருமா என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, ‘‘பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, ஆயிரம் விளக்கு பகுதியில் தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த சிலர், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT