Published : 19 Dec 2017 03:51 PM
Last Updated : 19 Dec 2017 03:51 PM

குமரி மீனவர்களை சந்தித்தார் மோடி; விவசாயிகளிடம் குறைகள் கேட்பு: முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதிப்பைப் பார்வையிடவும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டோரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் பிரதமர் நரேந்திரமோடி இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.15க்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து சேர்ந்தார்.

பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலரும் வரவேற்றனர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் ஆளுநர் பன்வாரிலால், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட மத்திய மாநில அரசின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் பிரதமர் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவாகப் பேசினார்.

மேலும் இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். அதற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து 8 மீனவ கிராமங்களில் இருந்து வந்து இருந்த 25 மீனவப் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். அப்போது பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக பிரதமருக்கு ஒக்கி புயலின் தாக்கம் குறித்து காணொலி ஒளிபரப்பப்பட்டு விவரிக்கப்பட்டது.

தொடர்ந்து மீனவர்கள் பிரதமருக்குக் கொடுத்த கோரிக்கை மனுவில், ''மீனவர்கள் பலரும் இதுவரை கரை திரும்பவில்லை. மீட்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும். ஒக்கி பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மாயமாகும் போது விரைந்து தேடுவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும், கடலோரக் காவல் படையின் அதி நவீன ரோந்துப் படை தளம் குமரியில் அமைக்க வேண்டும். கடலையும், கரையையும் தொடர்புபடுத்தும் வகையில் நவீன தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மீனவர்களுக்கு, மத்தியில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்'' என அதில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்ந்து குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, முன்னோடி விவசாயிகள் செண்பகசேகரன் பிள்ளை, பத்மதாஸ், புலவர் செல்லப்பா உள்ளிட்ட 15 மீனவர்கள் பிரதமரை சந்தித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x