Published : 26 Dec 2017 09:32 AM
Last Updated : 26 Dec 2017 09:32 AM

பக்தர்களுக்கு உதவ குழுக்கள் அமைப்பு: மேல்மருவத்தூரில் இருமுடி செலுத்த வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

மேல்மருவத்தூரில் சக்திமாலை - இருமுடி விழாவைத் தொடர்ந்து கோயிலில் இருமுடி செலுத்த வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்களுக்கு உதவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த 13-ம் தேதி தைப்பூச சக்திமாலை-இருமுடி விழா தொடங்கியது. வரும் ஜனவரி 30-ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆதிபராசக்தி அம்மனைத் தரிசனம் செய்ய மேல்மருவத்தூர் வருகின்றனர். வரும் ஜனவரி 31-ம் தேதி பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றி வைக்கிறார்.

இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இருமுடி எடுத்து வருகின்றனர். இவர்கள் சிரமம் இல்லாமல் அம்மனைத் தரிசனம் செய்து இருமுடி செலுத்தி வேண்டுதலை நிறைவேற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சிறப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

இருமுடி செலுத்தும் பக்தர்களுக்கு ஆதிபராசக்தி அன்னதானக் கூடத்தில் உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களை வரிசைப்படுத்தும் பணியில் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையிலான பாதுகாப்புக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

பக்தர்கள் இருமுடி செலுத்தும் பகுதிகளில் வேள்விக் குழு, உணவுக்குழு, கருவறைக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் செயல்பட்டு வருகின்றனர்.இருமுடி செலுத்தும் பக்தர்கள் வசதிக்காகப் பல விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லவும், சிறப்பு ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இருமுடி விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x