

சென்னை: சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களின் 4 வயது மகன் ரக்ஷன். அப்பகுதியில் உள்ள பள்ளியில் மழலையர் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் குறையாததால், கடந்த 6-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், டெங்கு காய்ச்சலின் தீவிர பாதிப்பால் நேற்றுமுன்தினம் இரவு சிறுவன் உயிரிழந்தான். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரவாயல் பகுதியில் சுகாதாரப் பணிகள் சரியாக நடைபெறாததே சிறுவன் உயிரிழக்க காரணமென்று பெற்றோர், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். சுகாதார அதிகாரிகள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மதுரவாயல் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் போலீஸார்குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். அப்பகுதிக்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வீட்டின் கதவுகளில் ஒட்டினர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ``இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதனால், குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுவே டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக உள்ளது'' என்றனர்.