

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் 2017-ல் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக, உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த கனகராஜின் சகோதரர் தனபால், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இதையடுத்து, அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு நேற்று சம்மன் அளிக்கப்பட்டது. சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்மன் வழங்கப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தும்போது, அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக பல்வேறு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.