

உதகை: மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கிய நிதியில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாகக் கூறி உதகை ஏடிசி பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும்போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘‘பட்டியலின மக்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு வழங்கிய நிதியை தமிழக அரசு மகளிர் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு மாற்றுகிறது.
இதனால் பட்டியல் இன மக்களின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசிடம் நிதி இல்லை என நாங்கள் கருதுவதால் பொது மக்களிடம் பிச்சை எடுத்து அந்த நிதியை அரசுக்கு அனுப்ப உள்ளோம்’’ என்றனர். இதில் பாஜக மாவட்ட தலைவர் மோகன் ராஜ், பட்டியலின மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.