சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் இடையே சுரங்கப் பாதை ஆரம்பக்கட்ட பணி தொடக்கம்: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் இடையே சுரங்கப் பாதை ஆரம்பக்கட்ட பணி தொடக்கம்: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், சேத்துப்பட்டில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மற்ற இடங்களில் சுரங்கம் தோண்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், 2.8 கி.மீ. தொலைவுக்கு சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக பூமிக்கடியில் கட்டுமான பணிகள் மேற்கொண்டு, அங்கு சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டது. இப்பாதையில் செப்டம்பர் முதல்வாரத்தில் சுரங்கப்பாதை பணி தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இதற்கான ஆரம்பக்கட்டப் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்டப்பணி தொடங்கியுள்ளது. சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை நோக்கி சுரங்கம் தோண்டப்படும். இந்த இயந்திரத்துக்கு ‘சிறுவாணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கும்.

சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் 205 மீட்டர் தொலைவு வரை சுரங்கப்பாதை அமைக்கப்படும். ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராகக் குறையும். சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங்சாலை இடையேயான சுரங்கப்பாதை பணிகளை அடுத்த ஆண்டுஏப்ரலில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

சேத்துப்பட்டு ஏரி: கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் சேத்துப்பட்டு மெட்ரோ என 2 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே சேத்துப்பட்டு ஏரி வருகிறது. இந்த ஏரியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. தற்போது, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேத்துப்பட்டில் இருந்து சேத்துப்பட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி இம்மாத இறுதியில் அல்லதுஅக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in