

சென்னை: ரயில்வேயில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி, சென்னையில் 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை அப்ரண்டிஸ் பயிற்சி(தொழில் பழகுநர்) முடித்து 17,000 பேர் உள்ளனர்.
ரயில்வேயில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி, பயிற்சி முடித்தோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் பகுதியில் தங்களது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அவர்களைகைது செய்து, எழும்பூர் அருகேதாசபிரகாஷ் பகுதியில் உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், 2-வது நாளாகநேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள், பெண்கள் என 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ``ரயில்வேயில் அனைத்து மண்டலங்களிலும், அப்ரண்டிஸ் பயிற்சிமுடித்தவர்கள் பணியில் நியமனம்செய்வதுபோல், தெற்கு ரயில்வேயில் எங்களை நியமனம் செய்யவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்”என்றனர்.