துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி சேர்ப்பா? : ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி சேர்ப்பா? : ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேர்வுக்குழுவில் யுஜிசி பிரதிநிதி சேர்க்க வேண்டியது கட்டாயமில்லை என்று ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இக்குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

இந்த சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசியின்) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக, சமீபத்தில் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித்துறை சார்பில் விளக்க கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அக்கடிதத்தில், துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின்விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர்சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளதுடன், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் விதிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in