ஆன்லைன் சூதாட்ட வழக்கு | ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட வழக்கு | ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் ஒருவாரத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி, ‘‘ஆன்லைன் மூலமாக பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை தடை செய்யும் விதமாகவே இந்தச் சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. நேரடியாக விளையாடும் விளையாட்டுகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆன்லைனில் விளையாடும்போது அதில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. பலர் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர்’’ என வாதிட்டார்.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், ‘‘ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வெற்றி பெற்றவர்களிடம் மட்டுமே 5 முதல் 7 சதவீத சேவை கட்டணங்களை வசூலிக்கின்றன’’ என வாதிட்டார்.

ஏற்கெனவே மனுதாரர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in