

சென்னை: சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னை காந்திமண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான செய்தித்துறை மானிய கோரிக்கையில், தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்குச் சட்டவடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயனின் சேவைகளை நினைவுகூரும் வகையில், அவருக்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, மா,மதிவேந்தன், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பொதுப்பணித் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழ்வளர்ச்சித் துறை செயலர் ஆர்.செல்வராஜ், செய்தித்துறை இயக்குநர் த.மோகன், ப.சுப்பராயனின் கொள்ளுப்பேரன் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.