மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம்

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு தள்ளுபடி

Published on

சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என தற்போதைய மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இந்த விவகாரத்தில் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பி்ல் தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தி்ல் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

இந்த வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி, அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in