

உதகை: கருத்தியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அரசியல் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரஸும், தற்போது ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இந்த 2 கட்சிகளும் பெரும் முதலாளிகளுக்காக ஆட்சி செய்தன. நீட், ஜி.எஸ்.டி. உட்படபல்வேறு அம்சங்களை காங்கிரஸ்தான் முதலில் அறிமுகம் செய்தது. 30 கோடி மக்கள்தொகை இருந்தபோது 543 மக்களவைத் தொகுதிகள் இருந்த நிலையில், தற்போது 130 கோடி மக்கள் தொகை வந்த பின்னர் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதது ஏன்? ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையால் எந்த பயனும் கிடையாது.
நடிகை விஜயலட்சுமி என் மீது குற்றம்சாட்டியது போலவே,பிரபல கன்னட நடிகர் உட்படபலர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். உயர்ந்த கருத்துகளுடன் அரசியலுக்கு வந்துள்ளேன். லட்சியங்களுடன் அரசியலுக்கு வந்துள்ள என்னை பெண்களை வைத்து அவதூறு பரப்பு கின்றனர். கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், பெண்களை வைத்து அரசியல் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன.
இது மிகவும் கீழ்த்தரமான அரசியல். 13 ஆண்டுகளாக தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் இது போன்று பிரச்சினைகளை சந்திக்கிறேன். கூட்டுக் குடும்பமாக வாழும் என் மீது அவதூறு பரப்புவதை பொறுத்துக் கொள்ள முடியாது. என்றாவது ஒரு நாள் நான் வெடித்து சிதறினால் அரசியல் கட்சிகள் தாங்காது.
விஜயலட்சுமியை நான் திருமணம் செய்திருந்தால் திருமண புகைப் படத்தையோ அல்லது கோயிலில்எடுத்த புகைப் படத்தையோ வெளியிடட்டும். இவ்வாறு அவர் கூறினார்.