Published : 12 Dec 2017 11:54 AM
Last Updated : 12 Dec 2017 11:54 AM
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் செல்லும் அவர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்கிறார்.
கடந்த நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரியை ஒக்கி புயல் தாக்கியது. இதனால், பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி அம்மாவட்டத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டக் களத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் தங்களது கண்ணீர் கோட்டைக்கு எட்டவில்லை; முதல்வர் இதுவரை நேரில் வந்து எங்களை சந்திக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
அதேபோல், திமுக செயல்தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். கன்னியாகுமரி மக்கள் கண்ணீரில் தவிக்கும்போது முதல்வரும் அமைச்சர்களும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பரபரப்பாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஸ்டாலினைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் பலவும் முதல்வர் ஏன் கன்னியாகுமரி செல்லவில்லை? என கேள்வி எழுப்பின.
கடும் விமர்சனங்கள் எதிரொலியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT