Published : 31 Aug 2023 06:38 AM
Last Updated : 31 Aug 2023 06:38 AM

ஓய்வுபெற்ற நீதிபதி கே.சாமிதுரை காலமானார்

கே.சாமிதுரை

சென்னை: கேரள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமாரின் தந்தையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கே.சாமிதுரை (91) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

விழுப்புரம் மாவட்டம் பாலிகிராமத்தைச் சேர்ந்த கே.சாமிதுரை, மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் 1853-ல் சட்டப் படிப்பை நிறைவு செய்து, வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.

1990 முதல் 1994 வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பு வகித்த சாமிதுரை, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவரது மனைவி டாக்டர்நித்யகல்யாணி. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் எஸ்.மணிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தார். பின்னர் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஓய்வுபெற் றார்.

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நீதிபதி சாமிதுரையின் இறுதிச் சடங்குகள் இன்று (ஆக. 31) மாலை சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளன. அவரது உடலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை உயிரிழந்த தகவலறிந்து மிகவும் வருத்தமுற்றேன். எளிய பின்புலத்தில் பிறந்து, கடும் உழைப்பால் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து, சட்டத்தின் துணையுடன் சமூக நீதியை நிலைநாட்டியவர் சாமிதுரை.

முதல்முறை உயர் நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு வந்தபோது, அதை மறுத்த, பதவி மேல் ஆசைகொள்ளாத அரிய மனிதர் அவர். பின்னர் இரண்டாம் முறை வாய்ப்பு வந்தபோதுதான், மரபு கருதி அதை ஏற்றுக்கொண்டார்.

2018-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கருணாநிதியின் புரட்சிகரமான பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டதும், அப்போதே என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டு ‘வருங்கால முதல்வர்’ என்று அழைத்ததும் என் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகிறது. சாமிதுரையை இழந்து வாடும் அவரது கொள்கை வழித்தோன்றல் கேரள உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவருமான எஸ்.மணிக்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x