

சேலம்: ஏற்காட்டில் முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுவையான காலை உணவு சமைத்த சமையலருக்கு, ஆட்சியர் கார்மேகம் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்திலுள்ள 1,418 தொடக்கப் பள்ளிகளில் பயின்றுவரும் 1,01,318 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை 67 அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகளில் இத்திட்டத் திற்கென வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் செயலி மூலம் நாள்தோறும் காலை உணவு தயார் செய்ய தொடங்கும் செயல்பாட்டினை புகைப் படமாக காலை 6 மணிக்கு முன் பதிவேற்றம் செய்திடவும், சமையல் தயார் செய்யும் பணியை 7.45 மணிக்கு முடிவடையச் செய்து அதன் புகைப் படத்தினையும், அதனைத் தொடர்ந்து குறித்த நேரத்தில் காலை 8 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை புகைப்படமாகவும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மேலும், தயார் செய்யப்பட்ட காலை உணவினை மாணவர் களுக்கு வழங்குவதற்கு முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினர் உணவினை சாப்பிட்டு தரமாகவும், சுவையாகவும் உணவு தயார் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பின்னர் மட்டுமே பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் கார்மேகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்தும் வழங்கிய சமையலர் சோனியாவை பாராட்டி பொன்னாடை அணிவித்து ஆட்சியர் கார்மேகம் பாராட்டினார்.
மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.