

தொழிலதிபர் சேகர் ரெட்டி டைரி குறிப்பில் தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக செயல்தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட சேகர் ரெட்டியின் டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி ஒளிபரப்பியது. அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பக்கங்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "லஞ்சப் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். புகாரில் சிக்கிய அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.