Published : 04 Dec 2017 06:49 PM
Last Updated : 04 Dec 2017 06:49 PM

ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல்!

ஜெயலலிதா மறைந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களம் குறித்த ஒரு பதிவு.

கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, உடல் நலம் தேறிவந்த நிலையில் டிச.4 அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக டிச.5 அன்று மரணமடைந்தார்.

இன்றுடன் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், இந்த ஓராண்டு ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கும் நோக்கில் இந்தப் பதிவு.

எம்ஜிஆரின் எழுச்சி

தமிழக அரசியலில் திமுகவின் வளர்ச்சி காங்கிரஸை வீழ்த்தியது. அதன் முக்கிய காரணகர்த்தாக்களில் அண்ணா, கருணாநிதி, திமுகவின் மூத்த தலைவர்களை அடுத்து எம்ஜிஆருக்கும் முக்கிய பங்கு உண்டு. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக முதல்வராக கருணாநிதி பங்கேற்றதிலும், அதன் பின்னர் 1971-ல் திமுகவின் அமோக வெற்றிக்கும் கருணாநிதியுடன் எம்ஜிஆர் துணை நின்றார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி. எஸ்.எஸ்.ஆர் என்று வரிசைப்படுத்தினாலும் முன்னணியில் மக்களிடம் பிரபலமானவர் எம்ஜிஆர். ஆனால் அவரே 1973-ல் வெளியேற்றப்பட்டபோது அவரை நடிகராக மட்டுமே விமர்சனம் செய்தனர்.

ஆனால் மக்கள் எம்ஜிஆரை அரசியல் தலைவராக ஏற்று அதிமுகவை அங்கீகரித்து 1977-ல் அவரை ஆட்சியில் அமர்த்தினர். எம்ஜிஆருடன் திமுகவிலிருந்து பல பெரிய தலைவர்கள், இளம் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், குழந்தைவேலு, கே.ஏ.கே என பலரும் உருவானார்கள். எம்ஜிஆருக்குப் பின்னால் யார் என்று யாரையும் காட்டாத நிலையில் 1982-ல் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா.

பல ஆண்டுகள் திமுகவின் ஸ்தாபன ரீதியான வளர்ச்சியுடன் வளர்ந்த எம்ஜிஆரை அரசியல்வாதியாக ஏற்க மறுத்தவர்கள் மத்தியில் திரையுலகிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வரும் இவர் என்ன செய்யப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தனது அடிகளை மெல்ல எண்ணி வைக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா.

தனித்துவ ஆளுமை ஜெயலலிதா

நடிகை என்ற பிரபலம், அவரது புத்தக அறிவு, மொழி அறிவைத்தாண்டி தனிப்பட்ட ஆளுமை கட்சியில் அவரை தனி இடத்திற்கு உயர்த்தியது. எம்ஜிஆரும் அதை அனுமதித்தார். கட்சியில் வளரும் போதே எதிர்ப்புகளும் வளர்ந்தன. ஆனால் திருப்புமுனையாக 1984-ல் எம்ஜிஆர் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தமிழகம் முழுதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக வெற்றிக்கு துணையாக இருந்ததன் மூலம் அரசியலில் தனது இடத்தை தக்கவைத்தார் ஜெயலலிதா.

1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி எனும் மிகப்பெரும் அரசியல் சக்தி முன் அதிமுகவை வழிநடத்த செல்வாக்கு மிக்க தலைவராக ஜெயலலிதாவை சில தலைவர்களும், வி.என்.ஜானகியை சில தலைவர்களும் தேர்வு செய்து இரு அணிகளாக தேர்தல் களம் கண்டனர். மக்கள் ஜெயலலிதாவை அங்கீகரித்தனர். அது சரியான முடிவுதான் என்பதைதான் இறக்கும் வரை அதிமுகவை வழிநடத்திச் செல்வதில் ஜெயலலிதா நிரூபித்தார்.

1991-96-ல் பதற்றமான ஒரு அரசியலை நடத்திய ஜெயலலிதா 1996-ல் பெற்ற படுதோல்விக்கு பிறகு மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் அவரது அரசியலில் ஓரளவு மாற்றம் தெரிந்தது. தமிழகத்தில் தனது நிலையை ஒரு நாளும் விட்டுக்கொடுக்காத தனித்துவமான தலைமையாக ஜெயலலிதா விளங்கினார்.

அவசரப்பட்டு எடுத்த பல நடவடிக்கைகள் காரணமாக ஜெயலலிதா மீது விமர்சனம் உண்டு. ஆனால் அதையும் தாண்டி சாதாரண மக்களிடம் எம்ஜிஆர் போன்று செல்வாக்கும் அவருக்கு இருந்தது. திமுக எதிர்ப்பு அரசியல் மட்டுமே அதிமுகவை நிலைத்து நிற்க வைக்கும் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார். மத்திய அரசுகளுடன் இணக்கமாக இருப்பது போல் காண்பித்துக்கொண்டாலும் மாநிலத்தில் தனக்குரிய உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் அரசியல் நடத்தினார்.

2014-ல் மோடி அலை இந்தியா முழுதும் வீசிய போதும், சகோதரி என்ற அளவுக்கு பிரதமர் மோடியுடன் நெருக்கமானவர் என்று அறியப்பட்டாலும், 'இங்கு மோடி அல்ல இந்த லேடி தான்' என்று துணிச்சலுடன் அறிவித்து வென்றும் காட்டினார். திமுகவும் அந்த தேர்தலில் தோற்றது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு என்று பேட்டி அளித்த ஒரே காரணத்துக்காக முன்னணி பிரமுகர் ஒருவரை கட்சியை விட்டு ஓரங்கட்டினார்.

2016 தேர்தலிலும் மீண்டும் வென்ற ஜெயலலிதா தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறலாம் என்ற நினைப்பிலிருந்தார், ஆனால் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் அவரை அசைய விடவில்லை என்று தகவல் உண்டு. ஆட்சியில் அமர்ந்து நான்கே மாதத்தில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 75 நாள் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிச-5-ம் தேதி மறைந்தார்.

அரசியல் வெற்றிடம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்பதை அரசியல் அறிந்த அனைவரும் அறிவர். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வு என இரு பெரும் சக்திகள் இல்லாத தமிழக அரசியல் இதற்கு முன்னர் பார்க்காத பல காட்சிகளை பார்த்து வருகிறது.

ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களத்தினால் தமிழகத்துக்கு பாதிப்பு உண்டா என்றால் கண்டிப்பாக உண்டு என்று பல உதாரணங்களை அடுக்கலாம்.

ஜெயலலிதா மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் விட்டு கொடுக்காத ஒரு தலைவராகத்தான் இருந்தார். மாநிலம் சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதாவை பகைத்து எந்த முடிவையும் எடுக்கவும் மத்தியில் உள்ளவர்களும் யோசித்தனர். ஜெயலலிதா இருக்கும் வரை, மாநில சுயாட்சி தெரிந்தோ தெரியாமலோ தமிழக தலைவர்கள் கையில் இருந்தது.

அதற்கு உதாரணம் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டியில் மாநில பங்கு குறித்த நிலைப்பாடு, துறைமுகம் - மதுரவாயல் திட்டம், கடலோர மேம்பால நெடுஞ்சாலை திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற திட்டங்களை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இதில் பல திட்டங்கள் மக்களைப் பாதிக்கும் திட்டங்கள் அல்லது மாநில நலனைப் பாதிக்கும் திட்டங்கள் என்று அவர் உறுதியாக நம்பினார்.

அவரது தேர்தல் உரையில் சில திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டேன் என்றும் அறிவித்து அதில் உறுதியாக இருந்தார். ஆனால் அவர் சிகிச்சையில் இருக்கும்போதே பல திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மாநில உரிமைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை எதிர்காலம்தான் சொல்லும்.

ஜெயலலிதா இல்லாத தமிழகம்

ஆனால் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விஷயத்தில் ஜெயலலிதா அனுமதிக்காமல் உறுதியாக இருந்தது ஏன் என்பதை சிலமாதங்களிலேயே தமிழகம் சந்திதது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் சாதாரண மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாதவரை அவர்களுக்கான தேவைகளில் கை வைக்கக்கூடாது என்று ஜெயலலிதா நம்பினார். அந்த திட்டத்திற்கும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கிடைத்த அனுமதியும் அதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் நிகழ்வுகளும் சாதாரண அடித்தட்டு மக்களை உடனடியாக பாதிக்கப்போகும் அறிகுறிகள் நன்றாக தெரிய ஆரம்பித்துவிட்டன. மீனவ மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் கடலோர மேம்பால நெடுஞ்சாலை திட்டமும் அனைவராலும் எதிர்க்கப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் ஜெயலலிதா எதிர்த்தார். அவர் சரியான பாதையில் பயணித்தாரா என்பதை வருங்கால நடைமுறைதான் நமக்கு உணர்த்தும் என்றாலும், மாநில உரிமைகளை பாதிக்கும் விஷயம் என்றால் அதை சமரசமில்லாமல் எதிர்த்தார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் அவர் எதிர்த்த திட்டங்கள் அவரது அடுத்தகட்ட தலைவர்களால் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்த உடன் நடந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் பெரும் இளைஞர் போராட்டமாக மாறியது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது என்ற பேச்சு அப்போது பலராலும் பேசப்பட்டது. ஆனாலும் மக்கள் சக்தி சில அவசர சட்டங்களை இயற்ற வைத்தது.

காவிரி பிரச்சினையில் துணிச்சலாக சட்ட ரீதியாக போராடி நடவடிக்கைகள் எடுக்கும் அளவுக்கு கொண்டு சென்றதில் ஜெயலலிதாவுக்கு முக்கிய பங்குண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவு அவரது மரணத்திற்குப் பின்னர் தீர்ப்பாக கிடைத்தது. ஆனால் மத்திய அரசு முடிவை அமல்படுத்துவதில் நாடாளுமன்றம் மூலம் தீர்மானிப்போம் என்று எடுத்த முடிவினால் அது பின்னுக்கு தள்ளப்பட்டது.

ஜெயலலிதா எனும் அழுத்தம் அன்று இருந்திருந்தால் ஒருவேலை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதன் பின்னர் மாநில உரிமை சார்ந்த விஷயங்களில் மத்திய அரசின் தலையீடு உள்ளதாக கூறும் அளவுக்கு பல விஷயங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாவட்ட வாரியாக நடத்திய ஆய்வுகளும், அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தபோதும் எதிர்க்க வேண்டியவர்கள் அதை சரிதான் என வாதிட்டபோது ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

பொதுவாக மாநிலத்துக்கு தலைமைச்செயலாளர் இருப்பார், ஆனால் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் போதே ஆளுநருக்கே தலைமைச் செயலாளரை நியமிக்கும் ஒரு புதிய முன்னுதாரணம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட போது ஒரு முணுமுணுப்புக்கூட எழாதது ஜெயலலிதா இல்லாத அரசியலை அனைவர் கண் முன்பும் கொண்டு வந்து நிறுத்துவதாக எதிர்க்கட்சியினரே விமர்சனம் செய்யும் அளவுக்கு செல்கிறது.

மேற்கண்ட உதாரணங்கள் அரசு சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதா இல்லாததால் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். இனி வரப்போவது அரசியல் ரீதியாக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைகளே. ஒன்றின் பாதிப்பு அடுத்ததையும் பாதித்தது. ஜெயலலிதா இல்லாத அரசை வழிநடத்திச்செல்ல அரசியல் ரீதியாக ஏற்பட்ட எதிர்ப்புகளை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றித்தான் மேலே பார்த்தோம்.

அரசியல் ரீதியாக ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் பல மாற்றங்கள்

தகர்ந்தது ராணுவக் கட்டுப்பாடு

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக தலைமை வழக்கம் போல் சசிகலாவின் கைகளுக்குச் செல்ல ஓபிஎஸ் முதல்வரானார். கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட இடைப்பட்ட காலத்தில் ஆட்சியை முறையாக வழி நடத்திச் செல்வதை விட சசிகலாவின் அபிமானத்தை பெற்று அவரை முதல்வராக்கி அதன் மூலம் தங்கள் இருப்பைப் பலப்படுத்தி வளர சிலர் கட்சிக்குள்ளே எடுத்த முயற்சி சசிகலா ஓபிஎஸ்ஸை நீக்க அவர் முதல்வராக எடுத்த முயற்சிகள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தார் கட்சிக்குள்ளும், கார்டனுக்குள்ளும் வர அதை சிலர் விமர்சிக்கவும் சிலர் ஆதரிக்கவும் செய்தனர்.

நீருபூத்த நெருப்பாக இருந்த விவகாரம் ஓபிஎஸ் நடத்திய தியானத்தால் வெளிவர கட்சி பகிரங்கமாக இரண்டானது. முதன்முறை நேரடியாக ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக கருத்தைகளைக் கூற சசிகலாவும், ஆதரவு அமைச்சர்களும் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பேட்டி கொடுக்க அதிமுக இரண்டானது. சசிகலா முதல்வராவதற்கு முன்னரே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர நான்காண்டு சிறைத்தண்டனை காரணமாக நிலைமை தலைகீழ் ஆனது.

ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தில் சசிகலா குடும்பம், ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்கள் எடுத்து வைக்கப்பட்டது. அடுத்து வந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு மீடியாக்களுக்கு பேட்டி மேல் பேட்டி அளித்தார் ஓபிஎஸ். ஜெயலலிதா மறைவுக்கு சில நாள் கழித்து அவரது அண்ணன் மகள் தீபா வெளிச்சத்துக்கு வந்தார். அவரும் ஜெயலலிதா சிகிச்சை, உயில் குறித்து சந்தேகம் எழுப்ப தினமும் அவரது வீட்டு வாசல் முன் தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.

தன் பங்குக்கு அவரும் சில கருத்துக்களை கூறி எம்ஜிஆர் அம்மா ஜெ.தீபா பேரவை என்று கட்சியை தொடங்கினார். ஆனால் ஜெயலலிதா போல் அவர் அரசியல் நடத்த முடியாது என்பதை அவரது நடவடிக்கைகள் நிரூபித்ததால் அவர் சோபிக்க முடியாமல் போனார். ஓபிஎஸ் பக்கம் சில மூத்த தலைவர்கள் இணைய சில எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் இணைந்தனர். சசிகலா இல்லாவிட்டாலும் ஆட்சியை தக்கவைக்க கூவத்தூரில் அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கவைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார்.

சசிகலா சிறைக்குச் செல்லும் முன் ஜெயலலிதாவால் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன் துணை பொதுச் செயலாளராக்கப்பட்டார். ஓபிஎஸ் கையில் கட்சி உள்ளது என்று பரவலாக பேசப்பட்டது. ஆட்சியை கைப்பற்ற இரண்டு தரப்பும் முனைப்பு காட்ட அதிமுக ஆட்சியை கவிழாமல் நீடிக்க செய்ய வேண்டுமென்ற முனைப்பில் மத்திய அரசும் இருந்தது.

ஓபிஎஸ் தரப்பு உ.பி.யில் நடத்தியது போல் சட்டசபையில் யாருக்கு ஆதரவு என்று மறைமுக ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியபோது மத்திய அரசின் எண்ணம் வேறாக இருந்தது. இதனால் அந்த முடிவை கைவிட்டு திடீரென எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். அனைத்து எம்.எல்.ஏக்களும் பாதுகாத்து அழைத்து வரப்பட நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வென்றார்.

அதன் பின்னர் நடந்த அரசியல் மாறுதல்களில் ஓபிஎஸ் மத்திய அரசின் பக்கம் நெருக்கமாக இருப்பதை வெளிப்படையாக காண முடிந்தது. முதல்வருக்கு கிடைக்காத பிரதமரின் அப்பாயின்மெண்ட் ஓபிஎஸ்ஸுக்கு உடனே கிடைத்தது. ஆர்.கே.நகர் இடைதேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் எதிரெதிரே நிற்க 12 எம்.எல்.ஏக்கள் கொண்ட ஓபிஎஸ் அணியின் வேண்டுகோளை ஏற்று இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

கட்சியும் முடக்கப்பட்டு இரண்டு அணிகளானது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அணி என பிரிந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் யார் வெல்கிறாரோ அல்லது யார் அடுத்த இடத்தைப் பிடிக்கிறாரோ அவரே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக என்பதால் வெல்வதற்கான அனைத்து வழிமுறைகளும் கையாளப்பட்டது. இதனால் ஏற்பட்ட புகாரினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசிடம் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் நெருக்கத்தை குறைக்க தாங்களும் நெருங்க ஆரம்பித்தனர். இதன் விளைவு மாநிலம் சார்ந்த ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தனர். வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்காத போதிலும் எதிர்ப்பு காட்டவில்லை. நீட் நுழைவுத்தேர்விலும் எதிர்ப்பு காட்டாமல் நமக்கு வேறு வழியில்லை என ஒப்புக்கொண்டனர். ஜி.எஸ்.டி விவகாரத்திலும் மத்திய அரசோடு இணக்கமாக எதிர்ப்பின்றி முடித்து கொடுத்தனர்.

இரட்டை இலையை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்று கூறி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். தினகரனை ஒதுக்கவும் கட்சி, ஆட்சியை தங்கள் வசம் வைத்துக்கொள்ளவும் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவெடுத்தனர். இதற்கு ஒரே தீர்வு ஓபிஎஸ்ஸை மீண்டும் அணியில் இணைக்கவேண்டும் என்பதே என்ற முடிவுக்கு வந்த அவர்களுக்கு உதவியாக ஓபிஎஸ்ஸுக்கும் சிக்னல் தரப்பட அறைகுறை மனதோடு சம்மதித்தார்.

இரட்டைத்தலைமை, இருவருக்கு அமைச்சர் பதவி என்ற நிபந்தனையுடன் கட்சி இணைந்தது. இதில் ஓபிஎஸ்ஸுடன் உறுதுணையாக இருந்த பலருக்கும் இதுவரை எந்த லாபமும் இல்லை என்பதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் பகிரங்கமாக வெளியான விமர்சனங்கள். பொதுக்குழுவில் ஒருவழியாக இரட்டைத்தலைமை அங்கீகரிக்கப்பட, வழிகாட்டுக்குழு அமைப்பது என்றும் முடிவெடுத்தனர்.

ஆனால் வழிகாட்டுக்குழு இதுவரை அமைக்காமல் இருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களால் கடுமையாக பார்க்கப்படுகிறது. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயனின் விமர்சனம் அவரது சொந்தக் கருத்து மட்டுமல்ல ஓபிஎஸ் அணியினர் அனைவர் மனதிலும் உள்ள கருத்துதான் என்பதை பல இடங்களில் காண முடிகிறது. சாதாரண முடிவைக்கூட எடுக்க முடியாத துணை முதல்வராகத்தான் இருக்கிறார் ஓபிஎஸ் என்பதே அவரது அணியினர் எண்ணமாக உள்ளது.

திமுகவுக்கு சாதகமான அரசியலாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நடக்கும் காய்நகர்த்தலும், அடுத்து வரும் மூன்றரை ஆண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பதைபதைப்பையும் இரு பக்கமும் காண முடிகிறது. மாநிலத்தில் ஒற்றுமையில்லாத கட்சியும், எந்நேரமும் ஆட்டம் காணும் அரசும் இருக்கும் வரை அது மத்திய அரசைச் சார்ந்தே இருக்கும் என்பதற்கு தமிழக அரசியல் சூழல் சிறந்த உதாரணமாக உள்ளது.

இரட்டை இலை கைக்கு வரட்டும் கட்சி நம் கையில் என ஓபிஎஸ் அணியினர் கணக்குப்போட இரட்டை இலையை முதலி பெறுவோம் மற்றதை பிறகு பார்ப்போம் என இபிஎஸ் அணி கணக்குப்போட இரட்டை இலையும் கிடைத்துள்ளது. ஆனாலும் ஒற்றுமை இல்லை என்பதை ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வில் காண முடிகிறது.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டு அரசியலில் அதிமுகவில் காணாமல் போனது இரண்டு முக்கிய விஷயங்களில் ஒன்று ராணுவ கட்டுப்பாடு. கட்சியில் தலையே போனாலும் தலைமைக்கு எதிராகவோ, கட்சி நடவடிக்கைக்கு எதிராகவோ யாரும் பேச மாட்டார்கள். இரண்டு ஒரே தலைமை, ஒரே குரல் என்ற நிலையும் மாறிப்போனது. விளைவு விமர்சனம், கண்டனம் என அதிமுகவின் அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறது கட்சி.

ஆட்சி என்ற நூல் ஒற்றுமை என்னும் முத்துக்களை கோத்து வைத்துள்ளது. ஆட்சி எனும் நூல் அறுந்தால் ஒற்றுமை சிதறிப் போகும் என்பதே தற்போதை அதிமுகவின் நிலை. தலைவன் இல்லாத படைக்களம் இருக்கும் நிலைதான் இன்றைய அதிமுகவின் நிலையாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக எதிர்ப்பு அரசியல்

ஜெயலலிதா இருந்த அரசியலில் எதிர்த்து களம் காண பலரும் தயங்கினர். அரசியலிலும், திரையுலகத்திலும் ஜெயலலிதா என்ற ஆதிக்கம் இருந்ததைக் காண முடிந்தது. அவரது மறைவுக்கு பின்னர் எதிர் கருத்துகள், அதிமுக எதிர்ப்பு அரசியல், நடிகர்கள் களத்தில் குதிப்பது என்ற நடைமுறைகள் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே அதிகரித்து வருகிறது.

அதிமுக அமைச்சர்கள் பற்றிய பிம்பங்களும் ஜெயலலிதா என்ற ஆளுமையின் காரணமாக கட்டிக்காக்கப்பட்டது, அவரது மறைவுக்கு பின்னர் வெளிப்படையாக பேச ஆரம்பிக்க அதுவும் பொதுமக்களாலும், வலைதளங்கள், முகநூல்களில் விமர்சிக்கப்பட ஆரம்பித்துள்ளது.

ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள், பொதுமக்களுக்கான பயன் தரும் திட்டங்கள் பலவற்றைத் தொடர்ந்து அமல்படுத்துவதாக கூறினாலும் அதில் சுணக்கம் காணப்படுகிறது. கருணாநிதி எனும் மாபெரும் அரசியல் சக்தி இல்லாத அரசியல் களத்தில் இறங்கி கம்பு சுற்ற வேண்டியவர்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிரே கொண்டுள்ள அரசியல் எதிர்ப்பால் வேறொரு தலைமையிடம் சரணாகதி அடைந்து ஆட்சியைத் தொடரும் நிலைதான் இன்றைய தமிழக நிலை.

இதன் விளைவு தமிழகத்தின் பல உரிமைகள் கேட்டுப்பெறப்படாமலே முணுமுணுப்பு கூட இல்லாமல் முடிகிறது. அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுபோல் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில்தான் ஜெயலலிதா இல்லாத இந்த ஓராண்டு அரசும், அதிமுகவின் ஒற்றுமையும் உள்ளது. எம்ஜிஆருக்குப் பிறகு தனித்துவமான தனது தலைமையால் 28 ஆண்டுகள் கட்சியை வழிநடத்தினார் ஜெயலலிதா. ஆனால் ஒராண்டுக்குள் துணிச்சலான தனித்துவமான தலைமையில்லாமல் தள்ளாடுகிறது அதிமுக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x