Published : 25 Dec 2017 03:28 PM
Last Updated : 25 Dec 2017 03:28 PM

அதிமுகவிலிருந்து கலைராஜன், நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி நீக்கம்

கலைராஜன், நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவின் அவசர ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை ராயபேட்டை கட்சி அலுவலகத்தில் கூட்டப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கட்சியிலிருந்து சிலரையும், மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து சிலரையும் விடுவித்துள்ளனர்.

அதிமுக தலைமை சார்பில் இரண்டு அறிக்கைகள் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கட்சியின் குறிக்கோள்களுக்கும், கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட

தென்சென்னை வடக்கு மாவட்டச்செயலாளர் வி.பி. கலைராஜன், நெல்லை மாவட்டச்செயலாளர் பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநிலச்செயலாளர் புகழேந்தி, கட்சி செய்தி தொடர்பு குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத், மகளிர் அணி துணைச் செயலாளர், கட்சி செய்தி தொடர்பு குழு உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாவட்டச்செயலாளர்கள் வெற்றிவேல், பார்த்திபன், தங்கத்தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி ஆகியோர் மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சியிலிருந்து நீக்கப் படவில்லை. இவர்கள் 4 பேரும் தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x