Published : 01 Dec 2017 10:53 AM
Last Updated : 01 Dec 2017 10:53 AM

குமரி வழித்தடத்தில் பல ரயில்கள் திடீர் ரத்து

கன மழை, சூறைக்காற்று எதிரொலியாக நாகர்கோவில், கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தண்டவாளங்களில் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து நேற்று காலையில் திருவனந்தபுரத்துக்கு செல்லும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில் வழிப்பாதையில் வடக்குத் தாமரைக்குளம் அருகில் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்ததால், இந்த வழியாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நேற்று மாலை வரை ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவில்- கொச்சுவேலி, கொல்லம்- கன்னியாகுமரி மெமு ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் நேற்று ரத்து செய்யப்பட்டன. புனலூர்- கன்னியாகுமரி பயணிகள் ரயில் (எண்:56715 நெய்யாற்றாங்கரையோடு நிறுத்தப்பட்டது. கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் சேவை நேற்று முன்தினம் கொல்லம்- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டது. இதேபோல், சென்னை எழும்பூர்- கொல்லம் இடையேயான ரயில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்பட்டது.

பயணிகள் கடும் பாதிப்பு

திருச்சி- திருவனந்தபுரம் இன்டர் சிட்டி ரயில் நேற்று முன்தினம் திருநெல்வேலியோடு நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி ரயில், திருவனந்தபுரத்திலிருந்து புறப்படுவதற்கு பதில் நேற்று மதியம் 2.30க்கு நெல்லையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. சென்னை செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்கள் நேற்று பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பேருந்து போக்குவரத்து முடங்கிய நிலையில், ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x