Published : 13 Dec 2017 10:47 AM
Last Updated : 13 Dec 2017 10:47 AM
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்-ஜியோ) சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் எதிரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
8-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை 1.1.2016 முதல் வழங்குவது, ஊதிய முரண்பாடுகளைக் களைவது, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் நிர்ணயிப்பது, ஓய்வூதியம் வழங்கப்படாத அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கு வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
இதற்கு ஜாக்-ஜியோ சென்னை மாவட்ட அமைப்பாளர் எம்.ராஜன், மாவட்ட இணை அமைப்பாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் தொடங்கி வைத்து உரையாற்றினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் சங்க பொதுச்செயலாளர் கோ.குமரன் உண்ணா விரதப் போராட்டத்தை முடித்துவைத்தார். மாவட்ட பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT