கலைஞர் நூலகத்துக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார்கள்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கலைஞர் நூலகத்துக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார்கள்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மதுரை: ‘‘கலைஞர் நூலகத்துக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறார்கள்’’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ஜெ., பேரவை சார்பில் கோயில் அர்ச்சகர்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவணபாண்டி மற்றும் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘முதலமைச்சர் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை காப்பாற்றி விட்டோம், இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என கூறுகிறார். அவர் பேசுவதை கண்டு சிரிப்பது, அழுதா தெரியவில்லை.

ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்பு 30 ஆயிரம் கோடியை, ஸ்டாலின் குடும்பத்தார்கள் கொள்ளையடித்துள்ளனர். அதை சமாளிக்க தெரியவில்லை என நாடு முழுவதும் ஒப்புதல் வாக்குமூலத்தை எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் கூறவில்லை. அவர்கள் கட்சியை சார்ந்த நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜர் கூறினார். ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகுதான் இந்தியாவிலே கடன் சுமை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உருவானது.

ஏறத்தாழ 7,53,870 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளித்து வருகிறது. முதலமைச்சரையும், அமைச்சர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தனது தந்தை பெயரின் நூலகங்கள், நினைவு மண்டபம் அமைத்து விளம்பரம் செய்வதும், தனது தவப்புதல்வன் உதயநிதிக்கு மகுடம் சூட்டும் முயற்சியை தவிர, தமிழகத்தில் பூஜ்ஜியத்தை தான் செய்துள்ளீர்கள்.

விரைவில் தேர்தலில் மக்கள் உங்களுக்கு பூஜ்ஜியத்தைத் தான் வழங்குவார்கள். மதுரையில் கலைஞர் நூலகத்தை யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே சிம்மக்கல் மையம் நூலகம் உள்ளது. அந்த நூலகம் முழுமையாக பயன்படாத சூழலில் உள்ளது. நூலகத்தை சீர் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து இருக்கின்றனர். மக்கள் யாரும் கலைஞர் நூலகத்தை படிக்க பயன்படுத்த வரவில்லை. சுற்றுலா ஸ்தலம் போல் சுற்றிப்பார்க்க வருகிறார்கள். மாணவர்கள் கலைஞர் நூலகத்திற்கு கட்டாயப்படுத்தி அழைத்த வரப்படுகிறார்கள்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in