

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவக் கல்வி கலந்தாய்வைத் தொடங்காவிட்டால் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
புதுவை சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுவை மாநிலத்தில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கலந்தாய்வு தொடங்குவதில் தொடர்ந்து முன்னுக்குப் பின்னான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நம்மை சுற்றியுள்ள மாநிலங்களில் மருத்துவக் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. புதுவையில் இன்னும் முதல் கட்ட கலந்தாய்வே தொடங்கவிலலை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதுவை அரசு 10 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்று தர முடியாத நிலையில் உள்ளனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இல்லை. புதுவை அரசு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது.
கடந்த ஆட்சியிலேயே தீர்மானம் போட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் தற்பொழுது மீண்டும் காலம் கடந்து தீர்மானம் நிறைவேற்றிய கோப்பு டெல்லியில் முடங்கி கிடக்கிறது. முதல்வர் நம்பியுள்ள மத்திய அரசு இதற்கு அனுமதி கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். இதனால் அரசு மருத்துவக்கல்லூரியில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்று மாணவர்களும் பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு என தனியாக செவிலியர் கல்லூரி தொடங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது. இதற்கான அரசாணையில் ஆளுநர் கையெழுதிட்டாமல் உள்ளார்.
இதனால் 60 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு கிடைக்கும். செலிவியர் கல்லூரி ஆளுநரின் அனுமதிக்காக காத்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தின் மீது அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது. வரும் 5ம் தேதிக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் திமுக மாணவரணி தலைமையில் போராட்டம் 6 அல்லது 7ம் தேதிகளில் நடத்தும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க அரசு பள்ளிகளில் எந்த கட்டுமானமும் இல்லை. ஆசிரியரகளுக்கு போதிய பயிற்சி இல்லை. தமிழக பாட நூல் நிறுவனத்திடம் இருந்து ஆறு கோடி ரூபாய்க்கு மாநில பாடதிட்ட புத்தகங்களை வாங்கி விட்டு, இப்போது அதனை திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும் என தமிழக பாடநூல் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி வருகின்றார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு புதுவையை சேர்ந்த யாரும் தேர்வாகாததற்கு ஆளுநர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்று குறிப்பிட்டார்.