

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் மாற்று மதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரயில் மூலம் மலைக் கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். இதையடுத்து, இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறிவிப்பு பலகை கோயில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. இதற்கு, இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
பழநியைச் சேர்ந்த செந்தில்குமார், முருகன் கோயிலில் இந்து மதத்தை சாராதவர்கள் நுழைய தடை விதித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை திடீரென அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை இந்து மதத்தினரின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இந்து அல்லாதோர் கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அகற்றப்பட்ட அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல், பழநி மலைக் கோயிலுக்கு செல்லும் வின்ச் ரயில் நிலையம் நுழைவு வாயில் கதவில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது.