ஒகேனக்கல்லில் நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக உயர்வு: கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை

ஒகேனக்கல்லில் நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக உயர்வு: கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை
Updated on
1 min read

ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாத சூழலிலும் கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே, அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியதால் உபரி நீர் தொடர்ந்து காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழக எல்லையான ஒகேனக்கல் பகுதியை எட்டிய நீரின் அளவு ஆரம்பத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. பின்னர் நீர்வரத்து வேகமாக அதிகரித்து 20 ஆயிரம் கன அடியைக் கடந்தது. அதன்பிறகு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து மேலும் கூடி வருகிறது.

சனிக்கிழமை காலை நிலவரப் படி விநாடிக்கு 36 ஆயிரம் கன அடியைக் கடந்து வந்து கொண்டிருந்த நீர்வரத்து அன்று இரவு 39 ஆயிரம் கன அடியை எட்டியது. ஞாயிறு காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணி வரையிலும் அதே நிலை நீடித்தது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் ஆர்ப்பரிக்கும் ஓசையுடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லின் முக்கியப் பகுதிகளுக்குள் நுழையத் தடை நீடித்து வருகிறது. நீர்வரத்து இதே வேகத்தில் தொடர்ந்தால் சில நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in