Published : 10 Dec 2017 11:08 AM
Last Updated : 10 Dec 2017 11:08 AM

வாக்காளர் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் மருதுகணேஷ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் ஒவ்வொரு தெருவாக நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதி கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தினமும் காலை 4 மணி நேரம், மாலை 4 மணி நேரம் என மொத்தம் 8 மணி நேரம் நடந்தே சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வ.உ.சி. நகர் கார்ப்பரேஷன் காலனியில் நேற்று பிரச்சாரம் தொடங்கி, சேனியம்மன் கோயில் தெரு, கீரை தோட்டம், அரங்கண்ணல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

கூட்டணிக் கட்சிகள் ஆதரவு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக நிர்வாகிகளும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் மருதுகணேஷூக்கு ஆதரவு திரட்டினர். வழியெங்கும் இருந்த பொதுமக்கள் திமுக வேட்பாளருக்கு பூரணகும்ப மரியாதை அளித்தனர். திமுக கட்சி கொடிகளால் வீதிகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மேலும், பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் வரவேற்றனர்.

அடிப்படை பிரச்சினைகள்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாக இந்த தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமல் உள்ளன.

குறிப்பாக, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் தூர்வாரவில்லை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்யாதது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

இதுதவிர, திமுக ஆட்சியின்போது இந்த தொகுதிக்காக செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இதனால், பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x