பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: எச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: எச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டுதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப பெண்களை தரக்குறைவாக பேசியதாக வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல பெரியார் சிலையை உடைப்பேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும் எச்.ராஜா மீது வழக்குகள் பதியப்பட்டன. இதுபோல தமிழகம் முழுவதும் தன் மீது பதியப்பட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜரானார். மனுதாரருக்கு எதிரான அனைத்து புகார்களுமே செவிவழி செய்தியாக வந்ததுதான். ஆதாரங்கள் இல்லை என்றார்.

அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் ஆஜராகி, எச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமின்றி பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், பெண்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது. வெறுப்புணர்வு பேச்சுகளுக்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நீதிமன்றமே அவர் மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர முடியும். எனவே இந்த வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘ பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மனுதாரரான எச்.ராஜா இதுபோல பேசுவது முதல் முறை அல்ல என்றும் கண்டனம் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in