செங்கை நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்

செங்கை நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்
Updated on
1 min read

செங்கல்பட்டு: பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த 2012-ல் மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த தனியார் நிலத்தை சேதப்படுத்தியதாக மாமல்லபுரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு, செங்கை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ரீனா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதியின் உத்தரவின்பேரில் நேற்று திருமாவளவன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதன்தொடர்ச்சியாக விசாரணை நடத்திய நீதிபதி இந்த வழக்கை முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும், வரும் செப். 26-ம் தேதி மீண்டும் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in