Published : 12 Dec 2017 09:11 PM
Last Updated : 12 Dec 2017 09:11 PM
மெரினா கடற்கரையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகன் ஆகாஷ், கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நண்பர்களுடன் மெரினாவுக்கு சென்று கடலில் இறங்கி குளித்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானான். ஆகாஷ் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தனது மகனை கண்டுபிடித்து தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகாஷின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர், என்.சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து, திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாணவனை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடற்கரைக்கு செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கும் வகையில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, நீதிபதி ராஜீவ் சக்தேர் அறையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேரில் ஆஜரானார்.
அவரது பதிலில் கடற்கரையில் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 4 கிமீ பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்காமல் தடுக்க காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2012-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 162 பேர் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலரின் உடல்கள் மீட்க முடியவில்லை என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து வரும் காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT