Published : 03 Dec 2017 11:55 AM
Last Updated : 03 Dec 2017 11:55 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக உயர்நிலைக் கூட்டம் இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வைகோ வாசித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''தமிழக நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. ஆளும் அதிமுக அரசு மவுனம் காக்கிறது.
அதிமுக அரசை மத்திய அரசு ஆளுநர் மூலம் நேரடியாக ஆள முயற்சிக்கிறது. இந்நிலையில் திராவிட இயக்கத்தை காக்க வேண்டிய கடமை மதிமுகவுக்கு இருக்கிறது. இந்த சூழலில் அதிமுக அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டி இருப்பதால், தமிழக மக்கள் நலன் கருதி திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கிறது. திமுக வெற்றிக்காக மதிமுக பாடுபடும். நல்லிணக்க சூழல் ஏற்படும் தருணத்தில் திமுக - மதிமுக கூட்டணிக்கான ஒரு தொடக்கப்புள்ளி எனக் கருதலாம்'' என்றார்.
முன்னதாக, திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகமும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT