Published : 21 Aug 2023 04:50 AM
Last Updated : 21 Aug 2023 04:50 AM

கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடுவோம்: மதுரை மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி

ஒய்.ஆண்டனி செல்வராஜ் / என்.சன்னாசி

மதுரை: மதுரை வலையங்குளத்தில் அதிமுக எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பொதுச் செயலாளர் பழனிசாமி, நீட் விவகாரத்தில் திமுக மிகப்பெரிய நாடகத்தை நடத்துவதாக குற்றம்சாட்டினார். கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா வழியில் அதிமுக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை அடுத்த வலையங்குளத்தில் நேற்று நடைபெற்றது. காலையில் நடந்த நிகழ்ச்சியில், மாநாட்டு நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயரக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, மாநாட்டை பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 4.30 மணி அளவில் பழனிசாமி தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் அவர் பேசியதாவது:

அதிமுக மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி.31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சி. எம்ஜிஆர் 1972-ல் தொடங்கிய அதிமுக 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுகவை தொடங்கிய 6 மாத காலத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்ஜிஆர். அவரது முகத்தை பார்த்தாலே போதும், தானாக வாக்குகள் கிடைக்கும். அப்படி மக்கள் சக்தி பெற்ற கட்சியாக அதிமுகவும், அதன் தலைவர்களும் திகழ்ந்தனர். எம்ஜிஆர் மறைந்த பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று கருணாநிதி கனவு கண்டார். ஆனால், அதிமுக அழியவில்லை. ஒருபோதும் அதிமுகவை அழிக்க நினைக்காதீர்கள். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

மதுரை ராசியான மண்: மதுரை மண் மிகவும் ராசியானது. இங்கு தொட்டதெல்லாம் துலங்கும். அப்படிப்பட்ட மாவட்டத்தில் முதல்முறையாக, நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாநாடு நடத்தியுள்ளோம். மதுரை மண்ணில் தொடங்கப்பட்ட அனைத்தும் வெற்றிதான்.

திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் 13 ஆண்டு காலம் இருந்தனர். அப்போது கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கவில்லை. கடந்த 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ராமேசுவரம் சென்று கச்சத்தீவை மீட்போம் என்கிறார். ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை மீட்க போராடினார். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அவர் வழியில் நின்று கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடுவோம்.

தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு அடியோடு கெட்டுப்போய் உள்ளது. திமுகவின் 2 ஆண்டுஆட்சியில் பின்னடைவைதான் பார்க்கிறோம்.

நீட் விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மத்தியில் 2010-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது சுகாதாரத் துறை அமைச்சராக குலாம்நபி ஆசாத், இணை அமைச்சராக திமுகவின் காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார்.

2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, மு.க.ஸ்டாலின், உதயநிதி போன்றோர், ‘‘திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடப்படும்’’ என்றனர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தீர்கள். நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக. அதை தடுக்க போராடுவது அதிமுக.

திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 13 பேர் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்துவந்தன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும், அதை அவசர அவசரமாக விசாரித்து, 4 அமைச்சர்கள் விடுதலை ஆகியுள்ளனர். இதை சும்மா விடமாட்டோம். உச்ச நீதிமன்றம் சென்று வழக்கை தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

15 லட்சம் பேர் பங்கேற்பு: பழனிசாமி பெருமிதம்

அதிமுக மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள், மக்கள் பங்கேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பழனிசாமி தெரிவித்தார்.

மாநாட்டில் பழனிசாமி பேசும்போது, ‘‘அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறீர்கள். அனைத்தையும் சட்டரீதியாக வெல்வோம். இங்கு அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட எம்எல்ஏ, எம்.பி. ஆகலாம். ஏன் முதல்வராகவும் ஆகலாம். நான் ஒரு சாதாரண தொண்டன். கிளைச் செயலாளராக இருந்து, படிப்படியாக ஒன்றியம், மாவட்டம், மாநில பொறுப்புக்கு வந்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவுடன் தற்போது பொதுச் செயலாளர் ஆகியுள்ளேன். வேறு எந்த கட்சியிலாவது முடியுமா? அதிமுகவில் மட்டுமே உழைக்கிற சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவிக்கு வரமுடியும். இதுவரை எந்த மாநாட்டுக்கும் இதுபோல 15 லட்சம் தொண்டர்கள், மக்கள் வந்தது இல்லை. இந்திய அளவில் வரலாற்று சாதனை படைக்க உதவிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி’’ என்றார்.

மாநாட்டில், முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினர். அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x